முட்டாள் வேலைக்காரன்

கஞ்சம்பட்டி என்ற கிராமத்தில், கஞ்சன் என்னும்

பெயர் கொண்ட ஒரு பணக்கார வணிகன் இருந்தான். அவன் ஒரு முட்டாளான  ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான்.

 

சிலநாள்  சென்ற பின்பு,  அந்த ஊரில் மண்ணெண்ணெய்  பஞ்சம் வந்துவிட்டது. பணக்கார வணிகன் தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து  பீப்பாய் எண்ணையை  பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று சிந்தித்து,  உடனே வேலைக்காரனை அழைத்து ' நம்மிடம் இருக்கும் மண்ணெண்ணெய்  எல்லாவற்றையும்  நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டி புதைத்து விடு. யாருக்கும் தெரியக்கூடாது  என்றான்.

 

முட்டாள் வேலைக்காரன் தன் எஜமான் சொன்னபடி நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான். பின்பு வேலைக்காரன்  ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச்சென்று , எண்ணெயை  பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லா பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.

திடிரென்று  அவன் உள்ளத்தில், இந்த  காலிபீப்பாய்களை  என்ன செய்வது? என்று சிந்தித்தான். இது குறித்து  முதலாளி ஒன்றும்  சொல்லவில்லையே, என்ற  சிந்தனை எழுந்தது.

சரி அவரையே கேட்டு விடலாம் என்று விரைந்து  சென்றான்.

தூங்கி கொண்டிருந்த தன் எஜமானை எழுப்பி,

ஐயா, நீங்கள் சொன்னபடி , மண்ணெண்ணெய்யை  பள்ளத்தில் ஊற்றி விட்டேன். இந்த காலிபீப்பாய்களை என்ன செய்வது? என்று கேட்டான்.

இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான்

ஐயோ!  எல்லாம்  போச்சே என்று புலம்பினான். அன்றே அந்த முட்டாள் வேலைக்காரனை வேலையில் இருந்து நீக்கினான்.

கதையின் பொருள்: முட்டாளாக இருக்க கூடாது... முட்டாள்களை பக்கத்தில் கூட வைக்க கூடாது